அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் , அதிகாரப் பகிர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றோம் என்று கூறி முன்னெடுக்கப்படும் விடயங்கள் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்து விடும். ஜனாதிபதி இவ்வாறான வீணான குழப்பங்களை ஏற்படுத்தி காலத்தை இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகத் தீர்மானமொன்றுக்கு வரவேண்டும்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பொரளையில் நடந்த நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நாட்டு மக்கள் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றிப் பேசுகின்றார்களா? இல்லை. பொருளாதார பிரச்சினைகள், அதிகரிக்கப்பட்ட நீர் கட்டணம், செலுத்த முடியாமல் உள்ள மின் கட்டணம், சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள மந்த போசனை, கடைக்குச் சென்று பொருள்களை அதிக விலைக்கு கொடுத்து கொள்வனவு செய்ய முடியாமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலேயே அதிகம் பேசுகின்றனர்.
மக்களுக்கு வருமானம் பெற்றுக் கொள்ளும் வழிகள் கிடையாது. தமக்கு நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் ஒன்றை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என்றே கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறு பல பிரச்சினைகள் காணப்படும்போது ஜனாதிபதி 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏன் அடிக்கடி பேசுகின்றார்? இந்த சந்தர்ப்பத்தில் 13 தொடர்பில் ஏன் பேச வேண்டும்.
இவற்றை பார்க்கும்போது இரண்டு விடயங்கள் தெரிகிறது. ஒன்று 13ஐ நடைமுறைப்படுத்தப் போகின்றேன் என்று கூறி நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைகளை மறைப்பது. இரண்டாவது அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வது என்பனவாகும்.
ஜனாதிபதி 13ஐ நடைமுறைப்படுத்த போவதுமில்லை. நான் அதைச் செய்வேன் என இந்தியாவையும், தமிழ் அரசியல்வாதிகளையும், வடக்கு – கிழக்கு மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். 13 என்பது அரசமைப்பின் ஒரு பகுதியாகும். முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள். தேர்தலை நடத்தினால் 13 ஆவது திருத்தில் உள்ள 98 வீதமான விடயங்களை பூர்த்தி செய்ததை போன்றதாகும்.
மிகுதி பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் இடம் என்பன தொடர்பில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்றங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க முடியுமல்லவா? – என்றார்.