இலங்கை முழுவதும் உள்ள பாடகர்களுக்கு வாய்ப்புத் தரப்படும் என்று தெரிவித்து இணைய வானொலி ஒன்று முகநூல் ஊடாக போட்டி நடத்தி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கண்டி, நுவரேலியா, கொழும்பு, மாத்தளை போன்ற இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிந்தியாவில் இருந்து பாடகர்கள் நடுவர்களாக கலந்து கொள்வார்கள் என்றும், பல இலட்சம் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன என்றும் கடந்த மூன்று மாதங்களாக சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. போட்டியாளர்களிடம் இருந்து தலா ஆயிரத்து 750 ரூபாவும் பெறப்பட்டுள்ளது. இந்தப் பணம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இறுதிச் சுற்று மன்னாரில் நேற்று நடத்தப்பட்ட நிலையில், அதில் கலந்துகொண்டவர்களிடம் ஆயிரத்து750 ரூபாவும், பார்வையாளர்களிடம் 400 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டபோதும், முற்பகல் 11 மணிக்கே போட்டி ஆரம்பமானது. இசைக்குத் தொடர்பே இல்லாதவர்கள் நடுவர்களாக இருந்தனர் என்கிறார் நேற்று நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர். இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன, அவர்கள் குண்டர்களை வைத்து மிரட்டினார்கள் என்று நிகழ்வுக்குச் சென்ற மற்றொருவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று கூறுகின்றனர். போட்டி பெயருக்கு நடத்தப்பட்டது என்றும், வெற்றியாளர்கூட அறிவிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். தங்களின் பண இழப்புத் தொடர்பாக போட்டியாளர்கள் பலர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இணைய வானொலி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.