North

மன்னார் பாடசாலை மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் – அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பதின்ம வயது மாணவன் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாடசாலை அதிபர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது மன்னார் மேல் நீதிமன்றம்.

2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 23ஆம் திகதி மன்னாரில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவனான 10 வயதுச் சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவன் கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டார். இவர் மன்னார், செல்வநகரைச் சேர்ந்தவராவார்.

மன்னார் நீதிவான் நீதிமன்றில் நடந்த சுருக்கமுறையற்ற விசாரணையின் பின்னர் சட்டமா அதிபரால் மன்னார் மேல் நீதிமன்றத்தில் பாடசாலை அதிபருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதபதி எம்.எம்.எம்.மிஹால் முன்னிலையில் விளக்கம் நடைபெற்ற நிலையில் இன்று (செப்ரெம்பர் 11) வழக்கு தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது.

எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நிகழ்வு – நிபுணத்துவ சாட்சியங்கள் ஊடாக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரால் நிரூபிக்கப்பட்டதால் எதிரியைக் குற்றவாளி எனக் கண்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது. 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுகின்றது. தண்டப் பணம் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும். வழங்கத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மன்னார் மேல் நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பளித்தது.

தன் கட்டுக்காவலில் உள்ள மாணவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும். தற்போது அதிகரித்துவரும் இவ்வாறான செயற்பாடுகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவது அவசியம் என்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தனது தீர்ப்பில் கோடிட்டுக் காட்டினார்.

வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி செஸான் மஹ்பூம் வழக்கை நெறிப்படுத்தினார்.

Related Posts