யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டச் செயலர்களின் ஒரு வருட சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கடந்த 12ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஓய்வு பெறுகின்றார்.
இவர்கள் இருவருக்கும் மேலும் ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்க வேண்டும் என்று நேற்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்குச் சேவை நீடிப்பு வழங்கும் பட்சத்தில் பாதிக்கப்படும் அரச உத்தியோகத்தர்கள் எவராவது நீதிமன்றம் நாட்டினால் அதை எதிர்கொள்வது கடினம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், சேவை நீடிப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இவர்கள் இருவரின் சேவை நீடிப்புக் கோரிக்கை அமைச்சர் ஒருவரின் சிபாரிசுடனே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, கடந்த 12ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற கிளிநொச்சி மாவட்டச் செயலர் தற்போதுவரை உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் இல்லத்தை மீளக் கையளிக்கவில்லை.