யாழ்ப்பாணத்தில் அயல்வீட்டுப் பெண்ணின் தாலிக்கொடியை இரவலாகப் பெற்று விற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. வாய்பேச முடியாத பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை அயல்வீட்டுப் பெண் ஒருவர் இரவலாக வாங்கிப் பயன்படுத்திப் பின்னர் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவ்வாறு அண்மையில் தாலிக்கொடியை வாங்கிய இளம்பெண் மீண்டும் அந்தத் தாலிக்கொடியைக் கொடுத்துள்ளார்.
அந்தத் தாலிக்கொடியில் சற்று வித்தியாசம் இருப்பதை அவதானித்த வாய்பேச முடியாத பெண், நகைக்கடை ஒன்றில் கொடுத்து சோதித்தபோதுதான், அயல்வீட்டு இளம்பெண்ணின் தகிடுதத்தம் வெளியாகியுள்ளது.
21 பவுண் தாலிக்கொடிக்குப் பதிலாக கவறிங் தாலிக்கொடி ஒன்றையே திருப்பிக்கொடுத்துள்ளார் அந்தப் பெண். அதையடுத்து இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார் ஏமாற்றப்பட்ட பெண்.
அயல்வீட்டு இளம்பெண்ணை பொலிஸார் விசாரித்தபோது அவர் உண்மையைக் கக்கியுள்ளார்.
தாலிக்கொடியை வாங்கி விற்றுவிட்டு, அதைப்போன்ற தாலிக்கொடி ஒன்றைக் கவறிங்கில் செய்து மீளக்கொடுத்துள்ளார் அந்தப் பெண்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.